மதுரை: பரமக்குடி, மதுரையில் 9 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தென்மாவட்டங்களில் இன்று பந்த் போராட்டம் நடந்தது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. சில இடங்களில் நடந்த கல்வீச்சில் பஸ்கள் சேதமடைந்தன. பந்த்தால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பசு
ம்பொன்னில் கடந்த 30-ம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்று திரும்பிய 3 பேரை பரமக்குடியில் சிலர் அடித்து கொன்றனர். மதுரை ரிங் ரோட்டில் கார் மீது கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசியதில் 20 பேர் தீக்காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில் அடுத்தடுத்து 6 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதனால், கடந்த 30-ம் தேதி முதல் தென்மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டது. படுகொலைகளை கண்டித்தும் இதில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக், தேசிய பார்வர்டு பிளாக் மற்றும் தேவர் கூட்டமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த பந்த்துக்கு தென்மாவட்டங்களில் ஆதரவு இருந்தது. மதுரை மாவட்டத்தில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. அவற்றிலும் ஒன்றிரண்டு பயணிகளே சென்றனர். மதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும், மறியலும் நடந்தன. கல்வீச்சை தொடர்ந்து காலை 10 மணியளவில் மதுரை நகர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட அனைத்து பஸ்களும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டன.
திருமங்கலம் நகரில் கடைகள், காய்கறி மார்க்கெட், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. மறவன்குளம் பகுதியில் மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில், டவுன் பஸ் கண்ணாடி உடைந்தது. திருப்பரங்குன்றத்தை சேர்ந்த டிரைவர் ஆனந்த் தன்சிங் (36) படுகாயமடைந்தார். அலங்காநல்லூர் பகுதியிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் இயங்கவில்லை. விருதுநகரில் ஒரு சில கடைகள் திறந்திருந்தன. பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் ஓடவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மாணவர்கள் அவதிப்பட்டனர். திருவில்லிபுத்தூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அருப்புக்கோட்டையில் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பினர். அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி, நரிக்குடி, கமுதி, மானாமதுரை, பரமக்குடி, பெருநாழி பகுதிகளுக்கு செல்லும் அரசு, தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
ராமநாதபுரத்தில் நகைக்கடைகள், ஜவுளி நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. சிறிய கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 2 அரசு பஸ்களை மர்ம நபர்கள் கல் வீசி தாக்கினர். சாயல்குடி, கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. ராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை தனுஷ்கோடிக்கு வந்த அரசு டவுன் பஸ் மீது ஜடாமகுட தீர்த்தம் அருகே பைக்கில் வந்த 3 பேர் கற்களை வீசி தாக்கினர். காயமடைந்த டிரைவர் நயினா முகமது (53), ராமேஸ்வரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். காரைக்குடியில் உணவகங்கள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஒரு சில செயல்படுகின்றன.
உசிலம்பட்டி நகரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. வத்திராயிருப்பு அருகே ஒரு சமூகத்தை சேர்ந்தவரின் தோட்டத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் வாழை மரங்களை வெட்டிச் சாய்த்தனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பந்த்தால் தென்மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.