பரமக்குடியில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவு தினம் மற்றும் பிறந்த தினம் அனுசரிக்கப்படும் குருபூஜையை ஒட்டி நடந்த வன்முறையில் இது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை நான்கு எனத் தெரிகிறது. மருத்துவமனையிலும் பலர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.
கடந்த ஆண்டு பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் நினைவு நாளை ஒட்டி நடந்த வன்முறையில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஆறு தலித்துகள் கொல்லப்பட்டனர்.
இம்முறை கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் காவல்துறை நடவடிக்கையால் கொல்லப்படவில்லை. தலித்துகளால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு இமானுவேல் சேகரன் குரு பூஜையில் ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு நடந்த தேவர் குரு பூஜையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவரச் செய்யப்பட்டு அமைதியான முறையில் அவ்விழா நடந்தேறியது.
இம்முறை இமானுவேல் சேகரன் நினைவு நாளின்போது, வன்முறையை எதிர்ப்பார்த்து காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்பட்ட நிலையில் தேவர் குரு பூஜையில் ஏற்பட்ட வன்முறை பல உயிர்களை பலி வாங்கியுள்ளது.
தேவர் குரு பூஜையில் கலந்து கொண்டு 13 பேரை ஏற்றிச் சென்று திரும்பிய வேன் ஒன்று தலித்துகள் அதிகம் குடியிருக்கும் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்துள்ளது. அந்த வாகனம் நுழையும் முன்பே, கிராம நிர்வாக அலுவலர், அவ்வழியே செல்ல வேண்டாம் என்றுதடுத்துள்ளார். ஆனால், யாரோ ஒருவரை ஏற்றிக் கொள்ள வேண்டும் என்பதால், கிராம நிர்வாக அலுவலரின் எச்சரிக்கையையும் மீறி அந்த கிராமத்துக்குள் நுழைந்துள்ளனர். அடுத்த கிராமத்துக்குள் நுழைந்தபோது, அந்த கிராமத்தினர் உள்ளே செல்ல வேண்டாம் என்று தடுத்துள்ளனர். வேன் டிரைவர் அதையும் மீறி உள்ளே சென்றுள்ளார். மூன்றாவதாக ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது அந்த வேன் கல்வீசி தாக்கப்பட்டுள்ளது. வேனில் இருந்தவர்கள் உயிருக்குப் பயந்து தப்பி ஓடியுள்ளனர். வேனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வேன் டிரைவர் வேனோடு தப்பிக்க முயன்றபோது அங்கிருந்த கும்பல், அந்த வேன் டிரைவரை கல்லாலும், உருட்டுக்கட்டைகளாலும் தாக்கியதில் விருதுநகர் மாவட்டம் வேலாங்குடியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற டிரைவர் அந்த இடத்திலேயே இறந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த வீரமணி மற்றும் மாலைக்கண்ணன் என்ற இளைஞர்கள் இதே போல வழி தவறி, தலித்துகள் பெரும்பான்மையாக இருக்கும் பொன்னையாபுரம் என்ற கிராமத்துக்குள் இரு சக்கர வாகனத்தில் நுழைந்தபோது, அவர்கள் இருவரையும் வழி மறித்த கூட்டம், அவர்களையும் அடித்தே கொன்றிருக்கிறது.
அன்று இரவே, மதுரைக்கு அருகே தேவர் குரு பூஜைக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த வாகனம் ஒன்றை வழிமறித்த கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியதில் பலர் படுகாயமடைந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக மறுநாள் நடந்த வன்முறையில், தலித்துகள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைந்த 40 பேரைக் கொண்ட தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள், முதல் நாள் நடந்த சம்பவத்துக்கு பழி வாங்கும் வகையில் காட்டுக்குள் விறகு வெட்டிக் கொண்டிருந்த குலாளிக்குளம் பகுதியைச் சேர்ந்த ராமர், கருப்பன் ஆகியோரைத் தாக்கியுள்ளனர். அணைக்குளம் பகுதியில், இதே போல நடந்த தாக்குதலில் சரவணன், முத்துமாரி, பூமி, வடுகன் மற்றும் கருப்பையா ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
நடந்த இந்த சம்பவங்கள் மனசாட்சி உள்ளோர் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியது. இதில் இரு வேறு கருத்து இருக்கவே முடியாது. வழி தவறி வந்த ஒரு வேன் ட்ரைவரை கல்லாலும், கட்டையாலும் அடிப்பவர்களை எப்படி மனிதர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியும் ? இரு சக்கர வாகனத்தில் வழி தவறி வந்தவர்களை கல்லால் அடித்துக் கொல்பவர்களை மன்னிக்க முடியுமா ? வேனில் வந்தவர்களை கல்லால் அடித்து வழி மறித்து, அந்த வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றுபவர்களை மிருகங்கள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல முடியும் ?
இந்தப் படுகொலைகளை கண்டிக்காமல் எப்படி இருக்க முடியும் ? இந்த வன்முறைச் சம்பவங்களை மார்க்சிஸ்ட் கட்சியும், மறுமலர்ச்சி திமுகவும் மட்டுமே கண்டித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பரமக்குடியில் காவல்துறையினரால் 6 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டபோது எழுந்த கண்டனக் குரல்கள் தற்போது நடந்துள்ள இந்த வன்முறைகளைக் கண்டிக்காமல் மவுனம் சாதிப்பது மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.. சாதி என்னவாக இருந்தாலும் பலியானது மனித உயிர்கள்தானே… ? இந்த வன்முறைகளை மற்ற எல்லோரையும் விட முதலில் கண்டித்திருக்க வேண்டியது தலித் கட்சிகளே… விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் புதிய தமிழகத்தின் தலைவர் இதை முழு மனதோடு கண்டித்திருக்க வேண்டும். கண்டிக்காமல் விட்டது மிக மிக வருந்தத்தக்கது. செனாய் நகர் 13வது தெருவில் குப்பை வாராமல் இருந்தால் கூட கருத்து சொல்லும் கருணாநிதி இவ்விவகாரத்தில் கனத்த மவுனத்தைக் கடைபிடிக்கிறார்.
அரசியல் அமைப்புக்களைத் தாண்டி, மற்ற மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் இந்த வன்முறையை முழு மனதோடு கண்டிக்காதது வருந்தத்தக்கது...தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்...எங்கள் vote ர்காக மட்டும் எங்களை தேடும் தமிழ்நாடு இன அரசியல் கட்சிகளை அனைத்து முக்குலத்தோர் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.....