பஸ்கள் ஓடாததால் மதுரை போக்குவரத்து கழகத்துக்கு தினமும் கோடிக்கணக்கில் நஷ்டம்

கடந்த 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது பரமக்குடி பகுதியில் நடந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். மதுரை சிந்தாமணி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தது. இந்த வன்முறைகளை கண்டிக்கும் வகையில் மதுரை, விருதுநகர், ராம
நாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பல இடங்களில் பதட்டம் ஏற்பட்டது.

அரசு பஸ்களில் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. இதனால் கடந்த 30-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை மதுரை-பரமக்குடி போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மதுரையில் இருந்து ராமநாதபுரத்துக்கு மாற்று வழியில் சொற்ப எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன. மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இரவு பஸ்கள் நிறுத்தப்பட்டன.

மேலும் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் வழக்கம்போல இயக்கப்படவில்லை. நேற்று பந்த் நடத்தப்பட்டபோது மதுரை விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் 80 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. நேற்று மதுரை உள்ளிட்ட நகர் பகுதிகளில் பஸ்கள் இயக்கப்பட்டபோதும் பதட்டம் காரணமாக மக்கள் அதிக அளவில் பயணம் செய்யவில்லை.

இதனால் மதுரை அரசு போக்குவரத்து கழகத்துக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சிவகாசி, ராஜபாளையம் பகுதியில் பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தினமும் ரூ.3 கோடி அளவுக்கு வருவாய் இருக்கும்.

ஆனால் கடந்த வாரம் தினமும் ரூ.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மதுரை டிவிஷனில் மட்டும் கடந்த சில நாட்களாக தினசரி வசூல் ரூ.3 கோடியில் இருந்து ரூ.2.60, ரூ.2.40, ரூ.2 கோடி என படிப்படியாக குறைந்தது. அதுவும் நேற்று மிக குறைவாக வசூலானது. மதுரை டிவிஷனில் மட்டும் 15 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

மொத்தம் 33 டெப்போக்கள் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் மட்டும் உள்ளன. தினமும் 1100 பஸ்கள் இந்த டெப்போக்களில் இருந்து இயக்கப்பட்டன. ஆனால் தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

கடந்த 3 நாட்களாக வருவாய் ரூ.2 கோடியை கூட எட்டவில்லை. இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் உடைக்கப்பட்டுள்ளன. இந்த வருவாய் இழப்புகளை வரும் நாட்களில் ஈடுகட்ட அரசு போக்குவரத்து கழகம் திட்ட மிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி மதுரையில் இருந்து சென்னை, திருப்பூர், கோவை, நெல்லை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

எனவே இந்த நஷ்டத்தை இன்னும் ஒரு வாரத்தில் ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.