
முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30,
1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் பசும்பொன் எனும் சிற்றூரில்
பிறந்தவர். சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ்
சந்திர போசின் தலைமையில் பரங்கியரை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு
தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும்.
தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாள்
தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
என்றும் அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத்
தலைவராக இருந்தார். மேலும் மூன்று முறை இந்திய பாராளுமன்றத் தேர்தலில்
வெற்றி பெற்றுள்ளார்[1][2][3]. 1957 ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரன்
கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட இவர் இந்த கொலைக்கும் இவருக்கும் தொடர்பு
இருக்குமா என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால்
விடுதலை செய்யப்பட்டார்.
குழந்தை பருவமும் குடும்ப
வாழ்க்கையும் :
தமிழ்நாட்டின் தென்கிழக்கு
மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில்
மிகுந்த வசதி படைத்த பிறந்தவர். உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி
அம்மையாருக்கும் ஒரே மகனாவார். இவரது தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும்
முன்பே காலமானார். இவர் தாயை இழந்தபின்பு இவரது தந்தையார் குறுகிய
காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த
காரணத்தினால் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்ட உக்கிரபாண்டி தேவரின்
மீது பார்வதியம்மாள் அவர்கள் மிகுந்த கோபத்தில் இருந்தார். இதனால்
முத்துராமலிங்க தேவர் இவரது உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின்
பாதுகாப்பில் கல்லுபட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார்.
இளமைப் பருவத்தில் தேவரவர்கள்
குழந்தைசாமி பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் பயிற்றுவிக்கப்பட்டார். பிள்ளை
அவர்கள் தான் தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்து
தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக்
கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில்
முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை
மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன்
கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார்.
1924ஆம் ஆண்டு ஏற்பட்ட
உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக
முடிக்க இயலவில்லை. இவரது தந்தையாரின் அடுத்தடுத்த இரண்டு திருமணங்களின்
காரணத்தால் பசும்பொன் திரும்பிய பிறகு வாரிசு உரிமைக்கும் குடும்பப்
பாரம்பரிய சொத்துகளுக்கும் இவர் போராட வேண்டியிருந்தது. 1927இல்
வழக்குமன்றத்தில் இது சம்பந்தமான தீர்ப்பானது முத்துராமலிங்க தேவருக்குச்
சாதகமாக முடிந்தது. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டி தேவர் 1939ஆம் ஆண்டு
ஜூன் 6ஆம் நாள் மறைந்தார்.
குற்ற பரம்பரை சட்டத்திற்கு
எதிரான போராட்டம்:
தென்னக
அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான
போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை
உண்டாக்கியது. 1920ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை,
இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை
சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக
போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த
போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி
விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில்
சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார்.
ஆப்பநாடின் 19 கிராம மறவர்
சமூகத்தை சேர்ந்தவர்களை இந்த சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கைது
செய்தபின்பு தேவர் மிகப்பெரிய பிரச்சாரத்தினை கிராமங்கள் தோறும் நிகழ்த்தி
மக்களை திரட்டி போராடினார். இந்த போராட்டத்தில் தேவருடன் இருந்த
Dr.P.வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர், மற்றும்
நவநீதக்ருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு
நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆகிலும்
இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால் இந்த சட்டம் பிரித்தானிய
அரசினால் நீக்கப்படவில்லை. பின்னாளில் மீண்டும் தேவரின் தலைமையில்
போராட்டம் சீற்றமடைந்து இந்த சட்டம் நீக்கப்பட்டது.
1936 மாவட்ட வாரிய தேர்தல்:
குற்றபரம்பரை சட்டத்தின் காரணமாக
நீதி கட்சியின் அரசின் மீது இருந்த வெறுப்பு உண்டாகியது. இதன்பின் இந்த
சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் 1936ஆம் ஆண்டு பர்மாவில்
இருந்து திரும்பி வந்த தேவர் தென்தமிழகத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்கு
உழைத்தார். பின்னாளில் வந்த தேர்தலில் தேவர் முதுகுளத்தூர் தொகுதியில்
நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். இதுவே தேவரின்
முதல் தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பின்னர் தேவர் மாவட்ட வாரிய
தலைவரானார்.
1937 மாநில தேர்தல்:
1937ஆம் ஆண்டு நடந்த மதராஸ் மாகாண
தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் தேவர் அவர்கள் இளைஞர்களை காங்கிரஸ்
கட்சிக்கு உழைத்திடும்படிக்கு திரட்டினார். தேவரின் இந்த செயல்கள்
நீதிகட்சியினருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் அந்த அரசாங்கம்
தேவரை இராமநாதபுரத்திற்கு வெளியே பயணித்து பிரசாரம் செய்ய முடியாதபடிக்கு
சட்டங்களும் கட்டுபாடுகளும் விதித்தது.
1937ஆம் ஆண்டு பிப்ரவரியில்
இராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியை
கண்டு பயந்துபோன ஆங்கிலேய நீதி கட்சியரசு பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக
இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர் அந்த
தேர்தலில் மன்னரை எதிர்த்து மகத்தான வெற்றிபெற்றார்.
பின் வந்த தேர்தல்களில்
வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி மாகாணத்தினை ஆளும் கட்சியாக உருபெற்றது. இந்த
காங்கிரஸ் கட்சி அரசு குற்ற பரம்பரை சட்டத்தினை விலக்கும் என்று தேவர்
மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அப்போதைய புது அரசின் முதல்வரான
C.ராஜகோபாலாச்சாரி அவர்கள் அந்த சட்டத்தினை நீக்கவில்லை.
தொழிலாளர்களின்
தோழனாக:
1930களில் தேவர் அவர்கள் தொழிலாளர்களின்
நலனில் அக்கறை செலுத்தினார். பசுமலையில் மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன்
கூட்டமைப்பை உருவாக்கி தேவரே தலைமை ஏற்று நடத்தினார். மகாலெட்சுமி ஆலை
தொழிலார்கள் சங்கமும் மதுரா பின்னலாடை ஆலை தொழிலாளர் சங்கமும் இணைந்து
நடத்திய போராட்டத்தினை தேவர் தலைமை தங்கி நடத்தினார். பணி நீக்கம்
செய்யப்பட்ட தொழிலாளர்களை மீள் பணியில் அமர்த்தும் போரத்தில் தேவர் 1938
ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இந்த
போராட்டங்களில் வெற்றியும் பெற்றார். பின்னர் 1945 ஆம் ஆண்டு TVS தொழிலாளர்
சங்க தலைமை பொறுப்பையும் ஏற்றார்.
திரிபுரி காங்கிரஸ் மாநாடும் பார்வர்ட் பிளாக்கின் வளர்ச்சியும்:
1939ஆம் ஆண்டு திரிபுரியில்
நடைபெற்ற 52ஆவது வருடாந்திர காங்கிரஸ் கூட்டத்தில் தேவர் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை எதிர்த்து பட்டாபி
சீதாராமையா போட்டியிட்டார். சீதாராமையா காந்தியடிகளில் ஆதரவு பெற்றவராவார்.
ஆனாலும் மீண்டு போஸ் அவர்கள் தேவரின் ஆதரவோடு காங்கிரசின் தலைமை
பொறுப்பில் அமர்ந்தார். தேவர் தென்னிந்தியாவின் வாக்குகளை போஸ்க்கு ஆதராவ
திரட்டினார்.
பின்னர் காந்தியின் தலையீட்டின்
படிக்கு போஸ் அந்த பொறுப்பை விட்டு விலகி ஜூன் 22ஆம் நாள் அகில இந்திய
பார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார். காங்கிரஸ் கட்சியின் மீதான கருத்து
வேறுபட்டாலும் குற்றபரம்பரை சட்டத்தின் மீதான காங்கிரசின் நிலைபாட்டின்
காரணத்தினாலும் தேவர் போசுடன் இணைந்தார். பின்னாளில் செப்டம்பர் 6ஆம் நாள்
போஸ் மதுரைக்கு வந்திருந்த பொழுது தேவர் அவர்கள் போஸை வரவேற்கும் விதமாக
மிகபெரிய கூட்டத்தினை கூட்டினார்.
சிறையில்:
வளர்ந்து வந்த தேவரின் செல்வாக்கினாலும்
காங்கிரஸ் விரோத போக்கினாலும் கலங்கிய அப்போதைய அரசு தேவரின் தொழிலாளருடன்
இணைந்த போராட்டங்களை கரணம் காட்டி மதுரா பாதுகாப்பு என்கிற பெயரில் தேவர்
மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் மூலம் தேவர் மதுரையை விட்டு வெளியேற
முடியாதபடிக்கு தடுக்க நினைத்தது. பின்னர் 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மதம்
தேவர் மதுரையில் இருந்து தனது சொந்த ஊரான பசும்பொன்னிற்கு பயணித்த பொழுது
திருப்புவனத்தில் அவரை கைது செய்து திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் 18
மாத சிறைவாசத்தில் அடைத்தது. இவரது கைது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி
பேரலையை ஏற்படுத்தியது. 18 மாதங்களுக்கு பின்னர் இவர் விடுதலையான பொழுது
சிறை வாசலிலேயே இந்திய பாதுகாப்பு சட்டத்தினை கரணம் காட்டி மீண்டும்
சிறையில் அடைத்தனர். பின்னர் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் விடுதலை
ஆனார்.
சிறை வாசத்திற்கு பின்
மார்ச் மாதம் 1946 ஆம் வருடம்
நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட
தேவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார். இதன் பின்னர் குற்றபரம்பரை
சட்டம் நீக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 1948இல் காங்கிரஸ் கட்சியுடன்
ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சி தனித்து
பிரதான எதிர்க்கட்சியானது. இதில் தேவர் பார்வர்ட் பிளாக் கட்சியின்
தமிழ்நாட்டின் தலைவரானார் (இந்த பதவியில் இவர் பின் வந்த வாழ்நாள்
முழுவதும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).
1949 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று
தேவர் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் கூட்டத்தின் போது சுபாஷ் சந்திர போஸ்
உயிருடன் உள்ளார் என்றும் அவர் விமான விபத்தில் இறந்ததாக கூறுவது பொய்
எனவும் அவரை தாமே சந்தித்தாக பகிரங்கமாக அறிவித்தார். இதன் பின்னர் தேவர்
கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தவித அறிவிப்பும் இன்றி மறைந்திருந்தார்
சென்றார். பின்னர் 1950 இல் மீண்டு போது வாழ்க்கைக்கு திரும்பினார். இப்படி
மறைந்திருந்த காலங்களில் தேவர் சீனாவிற்கும் கொரியாவிற்கும்
இந்தியாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் பயணித்ததாகவும் தகவல்கள் நிலவின
ஆனாலும் இதற்க்கு ஆதாரமின்மையால் நிரூபிக்கபடாமல் போயின. பின்னாளில்
பார்வர்ட் பிளாக் கட்சியில் ஏற்பட்ட பிளவினால் 1948இல் கட்சி இரண்டாக
உடைந்தது. இந்த பிரிவினையில் தேவர் சார்ந்திருந்த பிரிவு மட்டுமே இன்றும்
நிலைத்திருக்கிறது.
1952 பொது தேர்தல்:
1952
ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் நடைபெற்றது. இதில்
மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்
என்கிற முனைப்புடன் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. லோக் சபா
மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில்
நடந்தது. இதில் தேவர் அருப்புகோட்டை லோக்சபா தொகுதியிலும் முதுகுளத்தூர்
சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றியும் பெற்றார்.
இதில் தேவர் அவர்கள் லோக்சபா பதவியை துறந்து சட்டமன்ற உறுப்பினராக
பதவியேற்று மதராஸ் சட்டமன்ற உறுப்பினர் குழுவில் இடம்பெற்றார். இந்த
தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மதராஸ் சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை
இழந்தது. மேலும் தேவர் கம்ம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து காங்கிரஸ் அல்லாத
ஆட்சியை நிறுவ முனைந்தார். ஆளுநர் அவர்கள் C.ராஜகோபாலசாரியார் அவர்களை
முதல்வராக நியமித்தார்.
பார்வர்ட் பிளாக் கட்சியின் பிளவு:
1955 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியில் மீண்டுமொரு பிளவு
ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் சகோதரத்துவத்தை ஆதரித்தது. மோகன் சிங்க்
மற்றும் சீல் பந்திரா யாகி போன்ற பார்வர்ட் ப்ளாக்கின் முக்கிய தலைவர்கள்
காங்கிரசுடன் இணைய முற்பட்டனர். இந்த முடிவை கட்சியின் பிற தலைவர்கள் ஏற்க
முன்வரவில்லை. பார்வர்ட் பிளாக் கட்சி தனித்தே இருக்க வேன்றுமென்று
விரும்பினர். இருப்பினும் மோகன் சிங்க் - யாகி ஆகியோர் தன்னிச்சையாக
காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த தருணத்தில் 1955 ஆம் ஆண்டு மே மாதம்
11 முதல் 15 தேதிகளில் நாக்பூரில் நடந்தது. இதில் சிங்க் - யாகி
ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதில் ஹேமந்த் குமார் போஸ் அவர்கள் தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஹல்டுல்கர் பொது செயலாளராகவும் தேவர்
அவர்கள் துணை தலைவராகவும் தேர்ந்தேடுக்கபட்டனர் (இந்த பதவியில் தேவர்
அவர்கள் இறக்கும் வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).
1957 பொது தேர்தல் :
1955 ஆம் ஆண்டு தேவர் அவர்கள்
பர்மா வாழ் தமிழ் மக்களின் அழைப்பை ஏற்று இரண்டாம் முறையாக பர்மா சென்றார்.
அங்கு பர்மா வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு அரசியல் மற்றும்
ஆன்மீக நிகழ்சிகளில் பங்கேற்றார். பின்பு 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18
ஆம் நாள் பொது தேர்தலை சந்திப்பதற்காக தாயகம் திரும்பினார். காங்கிரஸ்
அல்லாத ஆட்சி அமைக்கும் பொருட்டு பார்வர்ட் பிளாக் கட்சி உழைத்து
கொண்டிருந்த வேளையில். மெட்ராஸ் மாநிலத்தில் புது பரிணாமமாக காங்கிரஸ்
கட்சி இரண்டாக உடைந்தது. C.ராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் காங்கிரஸ்
ரீஃபார்ம் கமிட்டி (CONGRESS REFORM COMMITTEE) என்கிற பிரிவில் காங்கிரஸ்
உடைந்தது.
தேவர் இந்த முறை தனது முன்னாள்
அரசியல் எதிரியான C.ராஜகோபாலாச்சாரி அவர்களுடன் அமைதியை பேணினார். இதன்
காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி
கட்சியினரும் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க தேர்தலில்
இணைந்து பணியாற்றினர். இந்த தேர்தலிலும் தேவர் அருப்புகோட்டை தொகுதியில்
லோக்சபா உறுப்பினருக்கும் முதுகுளத்தூர் தொகுதியில் சட்டமன்ற
உறுப்பினருக்கும் போட்டியிட்டார். இம்முறையும் இரண்டு போட்டியிலும்
வெற்றிபெற்றார். இந்த முறை தேவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்.
இராமநாதபுரம் கலவரம்:
தேவர் முதுகுளத்தூர் தொகுதியின்
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால் இந்த தொகுதிக்கு
1957 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் நாள் அன்று இடைதேர்தல் நடத்தப்பட்டது. இதில்
தேவரின் ஆதரவு பெற்ற பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் சசிவர்ண தேவர்
வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவு அறிவிப்பு நேரங்களில் ராமநாதபுரம்
மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. இது பின்னை கலவரமாக
வெடித்தது பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அனேக ஆதரவளித்து வந்த மறவர்
இனத்தவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த தேவேந்திர
இனத்தவர்களும் பெருமளவில் மோதிக்கொண்டனர். இந்த கலவரம் இராமநாதபுரத்தை
சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் பலர்
கொல்லப்பட்டனர் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரயாக்கபட்டன.
இந்த கலவர நேரத்தில் லோக்சபா
கூட்ட தொடரில் கலந்து கொள்வதற்காக ஜூலை 17 ஆம் நாள் டெல்லி சென்றிருந்த
தேவர் அவர்கள் செப்டம்பர் 9 ஆம் நாள் திரும்பவும் தென்னகம் வந்தார்.
செப்டம்பர் 10 ஆம் நாள் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் சசிவர்ண
தேவர், மற்றும் வேலுவுடன் (பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த தலித்
சமூகத்தினை சார்ந்த தலைவர்) முத்துராமலிங்க தேவரும் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் சார்பில் ஆறு தலித் தலைவர்களும் மேலும் பல நாடார் சமூக
தலைவர்களும் கலந்து கொன்றனர். இந்த கூட்டத்தில் அனைத்து சமூகத்தவரும்
இணக்கமாக வாழ்வதென்று முடிவு செய்யப்பட்டு கூட்டம் கலைந்தது.
இதற்கிடையில் பரமக்குடியில்
இம்மானுவேல் சேகரன் தேவேந்திரர் என்பவர் துரதிஷ்டவசமாக கொல்லப்பட்டார்.
இந்த அரசியல் நிகழ்வு படுகொலை சற்று நேரத்தில் சாதி சண்டையாக உருவெடுத்து
தென் மாவட்டங்கள் ஜாதி கலவரத்தில் பற்றி எரிந்தன. கலவரம் போலீஸ் மூலம்
கட்டுக்குள் அடக்கப்பட்டு சிறிது நாளில் (செப்டெம்பர் 28 ஆம் நாள்) தேவர்
அவர்கள் இம்மானுவேல் சேகரன் கொலை சம்மந்தமாக பாதுகாப்பு சட்டத்தின் பெயரில்
கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்ன இந்த பாதுகாப்பு வழக்கு கொலைவழக்காக மாற்றப்பட்டது. பின்னர்
புதுகோட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு வழக்காடபட்டது. பின்னாளில் தேவர்
அவர்கள் இம்மானுவேல் சேகரன் கொலையில் சதி திட்டம் தீட்டியதாக குற்றம்
சாட்டப்பட்டார்.
பார்வர்ட் பிளாக் கட்சி தேவர்
மீதான இந்த வழக்கு காங்கிரஸ் கட்சியினரின் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக
தேவர் மீது போடப்பட்டது என்று கண்டனம் தெரிவித்திருந்தது. பின்னர் இந்த
வழக்கின் முடிவில் தேவர் இந்த வழக்கில் சம்மந்த பட்டிருப்பாரோ என்று
சந்தேகிக்க கூட இடமில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு.
தேவரை நிரபராதி என்று இந்த வழக்கில் இருந்து ஜனவரி 1959 விடுவித்தது.
இறுதி நாட்கள்:
வழக்கிலிருந்து விடுபட்ட தேவர்
அவர்கள் 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை நகராட்சி தேர்தலில் மும்முரமானார்.
இதில் கம்யூனிஸ்டுகள், இந்திய தேசிய குடியரசு காங்கிரஸ்(INDC - முன்னாளில்
காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி) ஆகிய கட்சிகளுடன் இணைந்து பார்வர்ட் பிளாக்
கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலின் பொழுது தான் திராவிட முன்னேற்ற
கழகமும் உருவானது. இதில் தேவரின் கூட்டு கட்சிகள் வெற்றி வாகை சூடின. இதுவே
தமிழகத்தில் காங்கிரசின் முதல் வீழ்ச்சியாகும். தொடர்ந்து வந்த
தேர்தல்களில் தேவர் அவர்கள் உழைத்ததின் காரணமாகவும் உடல்நலக்குறைவின்
காரணமாகவும் பொது வாழ்க்கையில் இருந்துது சிறிது காலம் விலகி இருக்க
நேர்ந்தது.
பின்னர் 1962இல் மீண்டு லோக் சபா
தேர்தலுக்கு இவர் முன்னிறுத்தப்பட்டார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேவர்
ஓரேயொரு பிரச்சார மேடையில் மட்டுமே தோன்றினார். இவருடன்
C.ராஜகோபாலசாரியார் அவர்களும் தேவரும் இணைந்து தோன்றிய கடைசி பிரச்சார மேடை
இதுவே ஆகும். தேவர் மீண்டும் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு
உடல்நலக்குறைவின் காரணமாக அப்போது நடைபெற்ற கூட்ட தொடரில் பங்கேற்க டெல்லி
செல்ல முடியவில்லை.
பசும்பொன்.உ.முத்துராமலிங்கத்தேவர்
அவர்கள் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் அவரது 55வது பிறந்த
நாளன்று இயற்க்கை எய்தினார். இவர் மறைவின் காரணமாக அருப்புகோட்டை லோக்சபா
தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் பார்வர்ட் பிளாக் கட்சி
போட்டியிட்டு தோற்றது. இதுவே தமிழகத்தில் இந்த கட்சியின் முதல்
தொல்வியாகும்.
கொள்கைகள்:
ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை
எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன
இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன.
தேசியமும் தெய்வீகமும் எனது இரு
கண்கள்
வீரமற்ற விவேகம் கோழைத்தனம்
- விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்
என்பனவல்லாம் இவர் மொழிந்த
வாசகங்களாகும். ஒரு தேசியவாதியாக தேவர் அவர்கள் திராவிடர் கழகம் மற்றும்
அதன் வழி கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆகியனவற்றை அவற்றின் பிரிவினை
வாதம் மற்றும் குறுகிய நோக்கு போன்ற கொள்கைகளுக்காக வெறுத்தார். அதேநேரம்
தேவர் லெனினிசம்-மார்க்சிசம் இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவரது
மறைவுக்கு பின் பார்வர்ட் பிளாக் கட்சி தனது அழிவின் பதில் சென்றது. இந்த
கட்சியின் அடுத்த தலைவராக P.K.மூக்கையா தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் பின்னர் இந்த கட்சியிலிருந்த
பெரும்பான்மையான மறவர் ஓட்டு வங்கியானது தி.மு.க.விற்கும்
அ.தி.மு.க.விற்கும் சென்றது. தேவர் இந்த தென்னக தேவரின மக்களின்
அன்பிர்க்குரியவராகவும் வணங்குதலுக்குரியவராகவும் திகழ்கிறார். இன்றும்
இந்த மக்களின் ஆதரவோடு ஆட்சியமைக்க பல கட்சிகள் இவர்களை ஆதரித்து வருகிறன.
இன்றும்கூட சில கலவரங்களின் பொழுது இவரது நினைவு சின்னங்கள் இலக்காவது
அனைவரும் அறிந்த ஒன்றே.
சிறந்த பேச்சாளர்:
தேவர் சிறந்த பேச்சாற்றல்
கொண்டவராக இருந்தார். குறைந்தது மூன்று - நான்கு மணிநேரம் சொற்பொழிவாற்றும்
நாவன்மை பெற்றிருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் சிறந்த
புலமையும் பேச்சாற்றலும் கொண்டவராக இருந்தார்.
ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த
ஞானமும், ஆன்மீக சொற்பொழிவுகளும் இவருக்கு தெய்வத்திருமகன் என்ற பெயரை
பெற்றுத்தந்தன. இவர் தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவராக
இருந்தார்.இவரது சொற்பொழிவுகளில் தமிழ் பாடல்களின் மேற்கொள்கள்
இடம்பெற்றும் வந்தன.
நன்றி ....
![]() |