கமுதி அருகே கலவரம்; கல் வீச்சு, தடியடி:போலீசார் உட்பட 10 பேர் காயம்: 15 வாகனங்கள் சேதம்

கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், இரு போலீசார் உட்பட, 10 பேர் காயமடைந்தனர்; 15க்கும் மேற்பட்ட வாகனங்களின், கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி, கலவரக்காரர்களை கலைத்தனர்.
முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கையில் இருந்து, பசும்பொன்னுக்கு தேவர் குரு பூஜைக்காக, ஜோதி தொடர் ஓட்டம் நடந்தது. நேற்று மாலை, கமுதி அருகே தோப்படைப்பட்டி ஊர் வழியாகச் சென்றபோது, அந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கும், ஜோதி ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும், பிரச்னை ஏற்பட்டது.



இதையடுத்து, புதுக்கோட்டைக்கு சென்ற ஜோதி ஓட்டத்தில் பங்கேற்றவர்கள், தோப்படைப்பட்டியில் வாகனங்களை சேதப்படுத்தியோர் மீது நடவடிக்கை கோரி, மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, தோப்படைப்பட்டி வழியாக, "ஜோதி தொடர் ஓட்டம், இனி வரக்கூடாது' எனக் கூறி, அங்குள்ளவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.இரு தரப்பினரிடமும், ராமநாதபுரம் எஸ்.பி., மயில்வாகனன், கமுதி ஏ.எஸ்.பி., அபினவ் குமார், தாசில்தார் குருசாமி ஆகியோர், பேச்சுவார்த்தை நடத்தினர். புதுக்கோட்டையில் மறியல் கைவிடப்பட்டது. இதற்கிடையே, பல பகுதிகளில் இருந்து, ஜோதியுடன் வந்தவர்கள், போலீஸ் பாதுகாப்போடு, தோப்படைப்பட்டி வழியாகச் சென்றனர்.

10 பேர் காயம்;தோப்படைப்பட்டியைச் சேர்ந்த சிலர், கற்கள், கம்பு, வேல் கம்புகளால் தாக்கினர். ஜோதியுடன் வந்தவர்களில் சிலர், திருப்பி தாக்கினர். இதில், இரு போலீசார் உட்பட, 10 பேர் காயமடைந்தனர். போலீஸ் உட்பட, 15க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன.தடியடி:இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி, கலவர கும்பலை கலைத்தனர். இதன் பின், நிலைமை கட்டுக்குள் வந்தது. தோப்படைப்பட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அங்கு, இரவு, 7:30க்கு, மின் தடை ஏற்பட்ட போது, சிலர் போலீஸ் வாகனங்கள் மீது, கற்களை வீசி, தப்பி ஓடி விட்டனர். தொடர்ந்து அப்பகுதியில், பதற்றம் நிலவுகிறது.