30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழா: பசும்பொன் கிராமத்தில் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் - டாக்டர் சேதுராமன் தகவல்.


அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள 105-வது தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு முழுவதில் இருந்தும் தொண்டர்கள் வரும்பொழுதும், திரும்பி ஊர் செல்லும்பொழுதும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பசும்பொன் செல்லும் வழிகளில் தீய சக்திகள் தூண்டுதல் காரணமாக கலவரங்கள் மூளலாம். தீய சக்திகளின் வலையில் விழ வேண்டாம்.

பொது அமைதியை சீர்குலைக்க யார் முயற்சி செய்தாலும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும். பசும்பொன் ஜெயந்தி விழா நம் இல்ல விழா. தேவரின் ஆசி பெற அனைத்து சமுதாய மற்றும் அனைத்து கட்சி தொண்டர் களும் கலந்து கொள்ளும் ஆன்மீக திருவிழா. விழாவுக்கு வருகின்றவர்களை வரவேற்று உபசரித்து வழியனுப்புவது அ.இ.மூ.மு.க. தொண்டர்களின் தலையாய கடமையாகும். கடமையில் 
கண்ணாக இருக்க வேண்டும் என்றால் முதலில் கட்டுப்பாடாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

அக்டோபர் 29-ம் தேதி இரவு முதல் 30-ம் தேதி மாலை வரை பசும் பொன்னில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் 1 லட்சம் பேர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பளம், நெய், பாயாசத்துடன் விருந்து பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க, இளைப்பாற ஓய்வு மண்டபமும், கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு உதவ சீருடை அணிந்த தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விரதம் இருந்து, நடைபயணமாக வரும் பக்தர்களுக்கு வரும் வழி முழுவதும் தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பசும் பொன்னில் அ.இ.மூ.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள தேரில் தேவரின் ஐம்பொன் சிலை வைக்கப்பட்டு 29-ந்தேதி அன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. மருது மன்னர்களின் 211-வது நினைவு நாளை முன்னிட்டு காளையார் கோவிலில் அ.இ.மூ.மு.க. நிறுவனர் தலைவர் சேதுராமன் தலைமையில் அன்னதானம் நடைபெறுகிறது.

நாட்டின் விடுதலைக்காக வெள்ளையர்களை எதிர்த்து போராடி இறுதியில் தொடர்ந்து மூன்று நாட்கள் ஆயிரக்கணக்கான மருதுபடை வீரர்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டனர். மன்னர் பெரிய மருதுவை அக்டோபர் 27-ம் தேதி தூக்கிலிட்டது வெள்ளை அரசு. இதனை முன்னிட்டு பெரிய மருது தூக்கிலிடப்பட்ட நாளான அக்டோபர் 27-ல் மதுரை தெப்பக்குளம் அருகில் உள்ள மருது மன்னர்களின் சிலைக்கு மருத்துவர் சேதுராமன் தலைமையில் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, திருப்பத்தூர் சென்று தூக்கிலிடப்பட்ட இடத்திலும், மருது மன்னர்களின் தலை அடக்கம் செய்யப்பட்டுள்ள காளையார் கோவிலிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. காளையார்கோவிலில் 50,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்வாறு சேதுராமன் அறிக்கையில் கூறியுள்ளார்.