ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்து ராமலிங்கதேவரின் நினைவாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்விழாவில் அரசியில் கட்சியினர் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான குருபூஜை விழா நாளை நடைபெற உள்ளது.
இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க 14 எஸ்.பி., 9 ஏ.டி. எஸ்.பி., 45 டி.எஸ்.பி., 51 இன்ஸ்பெக்டர்கள், 500 சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 10 மாவட்டங்களை சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் 12 மாவட்ட ஆயுதப்படை போலீசார், 15 தமிழ்நாடு சிறப்பு காவல் பணி பட்டாலியன்கள் ஆகியோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குருபூஜையையொட்டி ஆங்காங்கே போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய சாலைகளில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளன. லாட்ஜ்களில் தங்கியிருப்போர் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. சந்தேகம்படும்படி சுற்றித்திரியும் நபர்களை பிடித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பஸ், ரெயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிகளை போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் ஆய்வு செய்தார். பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
குருபூஜை விழாவில் கலந்துகொள்ள வருபவர்கள் அமைதியாக வந்து, திரும்ப வேண்டும். சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ஈடுபட முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. ராமானுஜம் தெரிவித்தார்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரெயில் தண்டவாள பாதுகாப்பு பணியிலும் ரெயில்வே போலீசார் ஈடுபட்டு உள்ளனர். ரெயில்வே எஸ்.பி. கயல்விழி தலைமையில் டி.எஸ்.பி.க்கள் வெள்ளையன், ராஜவேல், கண்ணன் மற்றும் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையம், தண்டவாளபகுதி, ரெயில்வே கேட் ஆகிய பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை ரெயில்வே கோட்ட ஆணையாளர் பாலசுப்பிரமணியம், உதவி ரெயில்வே கோட்ட ஆணையாளர் பதிபூரணம், இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலும் போலீசார் ரெயில் நிலைய பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர்.