தேவர் ஜெயந்தி திருவிளக்கு பூஜை ஏராளமான மாணவிகள் பங்கேற்பு.
கமுதி, : தேவர் ஜெயந்தி விழாவை ஒட்டி கமுதி கோட்டைமேடு தேவர் நினைவுக் கல்லூரியில் கருத்தரங்கம் திருவிளக்கு பூஜை மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் பசும்பொன்னில் நடைபெற உள்ளது. இந்த விழாவை ஒட்டி கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரியில் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. மேலும் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாணவிகள் சார்பில் 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் செல்வராஜ் தலைமை வகித்தார். வேதியியல் துறை பேராசிரியர் முத்துராமலிங்கம் வரவேற்றார். தேசிய நீரோட்டத்தில் தேவர் என்ற தலைப்பில் ஜீவபாரதியும், தொழிலாளர் நலனில் தேவர் என்ற தலைப்பில் மதுரை பசும்பொன் சிந்தனை மைய தலைவர் நவமணியும், சமுதாய நல்லிணக்கத்தில் தேவர் என்ற தலைப்பில் மதுரை சிஆர்ஓபி நிறுவனர் ஜார்ஜ் விருமாண்டியும் பேசினர்.
நிகழ்ச்சிகளில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.