தேவர் ஜெயந்தி விழா: மதுரையில்  போக்குவரத்து மாற்றம்.


  • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் மாலை அணிவிப்பார்கள். இதையொட்டி மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதுதொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  • நாளை (30-ந் தேதி) காலை 4 மணி முதல் ஊர்வலங்கள் முடியும்வரை நகருக்குள் லாரிகள், சரக்கு வாகனங்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது. கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில் தேவர் சிலைக்கு மாலையிட வரும் வாகனங்கள் தவிர மற்றவற்றுக்கு அனுமதி இல்லை. அதேபோல நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு வழியாக வரும் வாகனங்கள் பெரியார் சிலையில் இருந்து மாவட்ட கோர்ட்டு, கே.கே.நகர், ஆவின்
     சந்திப்பு, அண்ணாநகர் மெயின்ரோடு, பி.டி.ஆர். பாலம், காமராஜர் சாலை வழியாக செல்ல வேண்டும்.

  • மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பு ஆகிய பகுதியில் இருந்து நத்தம் ரோட்டிற்கு வரும் வாகனங்கள் ராஜா முத்தையா மன்றம், இளைஞர் விடுதி, ரேஸ்கோர்ஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். தத்தனேரி பகுதியில் இருந்து கோரிப்பாளையம் வரும் வாகனங்கள் பாலம் ஸ்டேசன் ரோட்டில் இருந்து குலமங்கலம் ரோடு வழியாக செல்லூர் கண்மாய்க்கரை பகுதிக்கு சென்று மாற்றுப் பாதைகளில் செல்ல வேண்டும்.

  • ஊர்வலம் நடக்கும் சாலைகளான அண்ணா சிலை சந்திப்பு, கீழ மாசிவீதி, விளக்குத்தூண், தெற்கு மாசிவீதி, அழகர்கோவில் மெயின் ரோடு, பாலம் ஸ்டேஷன் ரோடு ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. அந்த சாலைகளில் உள்ள சிறு தெருக்களில் வாகனங்களை நிறுத்தலாம். தேனி மாவட்டம் மற்றும் உசிலம்பட்டி பகுதியில் இருந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பசும்பொன் செல்வதற்கு வரும் வாகனங்கள் தேனி ரோடு வழியாக காளவாசல் வர வேண்டும்.

  • அதேபோல நெல்லை ரோடு வழியாக வரும் வாகனங்கள் பழங்கா நத்தம், பைபாஸ் ரோடு வழியாக காளவாசல் வர வேண்டும். பின்னர் அங்கிருந்து அரசரடி, புதுஜெயில் ரோடு, மதுரா கோட்ஸ் பாலம், சிம்மக்கல், யானைக்கல், கல்பாலம் வழியாக மேளக்காரத்தெரு சென்று பனகல் ரோட்டில் அந்த வாகனங்களை நிறுத்திவிட்டு தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும்.

  • திண்டுக்கல் மற்றும் மேற்கு பகுதி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் திண்டுக்கல் ரோடு வழியாக பாத்திமா கல்லூரி சந்திப்பு, செல்லூர், கொன்னவாயன் சாலை, பாலம் ஸ்டேஷன் ரோடு வழியாக வந்து பனகல் ரோட்டிற்கு வந்து வாகனங்களை நிறுத்த வேண்டும். வில்லாபுரம் பகுதி வழியாக வரும் வாகனங்கள் தெற்கு வாசல் சந்திப்பு தெற்கு மாரட் வீதி, மகால் ரோடு, கீழ மாரட் வீதி வழியாக யானைக்கல் வந்து கல்பாலம் வழியாக பனகல் ரோடு சேர வேண்டும்.

  • மாலை அணிவித்த பிறகு அனைத்து வாகனங்களும் பனகல் ரோட்டில்இருந்து ஆவின் சந்திப்பு, குருவிக் காரன் சாலை ரோடு, காமராஜர் சாலை வழியாக விரகனூர் சந்திப்பு சென்று மானாமதுரை, பார்த்திபனூர் வழியாக பசும்பொன் செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.